Wednesday, March 31, 2010

மந்திரக்கள்ளி...




பாறையின்


சித்திரங்களை


திரையிட்டிருக்கும்


நீர் வேலி


அருவி!!!






ஆழ்மனதின்


காதலை


மறைத்திருக்கும்


மந்திரக்கள்ளி


நீ!!!

களவு



ஆத்துமணலின்


அக்கரையில் பள்ளிக்கூடம்.


கணக்குப் பாடம் பழக


வழி நெடுக பலாமரம்...






அதென்னமோ


அந்த வயசுல


அறுசுவையும்


பலாச்சுவைதான்...






வேலிசாஞ்சி


எட்டிக் கைதூக்கி


பலாக்காயை தொட்டிருக்கோம்.


காவக்காரன் பாத்துட்டான்னா


பிரம்பு மொழி கேட்டிருக்கோம்...






மொதலாளி தந்த பாய் பயத்தவிட


இருள் தந்த பேய் பயத்தால


காவக்காரன் தூங்கிட்டான்.


களவாட துணிஞ்சிட்டோம்...






ஒன்னு பத்தாதுன்னு


நாலு பறிச்சோம்.


காயை கனியாக்க


ஆத்து மணலுல புதைச்சோம்...






காலையில


கையில கம்போட


காவக்காரன்


கெட்ட கெட்ட வார்த்தையில திட்டிகிட்டு இருந்தான்.






மனசுக்குள்ள நாங்களும்


திட்டிகிட்டுதான் இருந்தோம்.


ஆத்துமணல களவாடின-அந்த


கெட்ட கெட்ட வார்த்தைக்குரியவன நெனச்சு......








Tuesday, March 23, 2010

எப்படிச்சொல்வேன்....

சுற்றத்தாரின் தொடர்புகளையும்...
நண்பர்களின் நல விசாரிப்புகளையும்...
கடன் வாங்கிய விவரங்களையும்...
"வேலைக்கு ஆட்கள் தேவை'' பலகை மாட்டியிருக்கும்
கதவுகளின் முகவரிகளையும்...
என்னைப் போலவே
வேலை தேட
நாளை வரும் என் தம்பி,
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகும்
நான் வசிக்கும்
சென்னையின் சந்துகளை அறியாதவனாய்,
"நீயே வந்தெனை அழைத்துக்கொள்!" என்று
ஆயிரம் முறை
அனுப்பிய செய்திகளையும்...
சேமித்துவைத்திருந்த என் கைபேசியை
களவாடியவனிடம்
எப்படிச்சொல்வேன்-அது
இறந்துபோன என் அப்பா-எனக்கு
இறுதியாய் வாங்கிக்கொடுத்ததென்று!!!

Monday, March 15, 2010

அழகாயிருக்கிறாய்....



மன்றாடிக்கேட்கிறேன் உன்னை
முன்னிரவில் மொட்டைமாடியில் நிற்காதே....
கீழிருந்து பார்க்கும்போது
எது நீ, எது நிலவு என்று குழப்பமாய் இருக்கிறது எனக்கு......



******************************************
******************************************

 


என்னவள்
அழகிப்போட்டியில் பங்கேற்கிறாள்....
போட்டி போட
பூமியில் யாருமில்லை....
நிச்சயம் தோற்றுதான் போவாய்
பரவாயில்லை நிலவே!
பங்கேற்புச் சான்றிதழ் கிடைக்கும்
கீழிறங்கி வா!!!





*******************************************
*******************************************



நிலா
தான்
அழகென்பதை உறுதிசெய்ய
உன்னை உவமையாக கேட்கிறது......


********************************************
********************************************



நிலவுக்கு
தேய்பிறையும் வளர்பிறையும் எதனால் தெரியுமா?
நீ
கர்பத்தில் இருந்தவரை
நிலா
தான் தான் அழகென்ற கர்வத்தில் இருந்தது.
அதனால்தான்
கவலையில் இளைத்தலும்
உன்னை வென்றேதீரவேண்டுமென்று
மறுபடி மறுபடி தடித்தலும்
அதன் குலத்தொழில் ஆனது...


*******************************************
*******************************************
  
 



மின்னலாய் உன் பார்வை...
அது மின்னலென்பதாலோ என்னவோ
ஒரு நொடிக்குமேல் நீடிக்கவேயில்லை...


********************************************
********************************************



நல்லவேளை
பூமி ஒரு பெண்ணென்பதால்
மரம், செடி கொடியெல்லாம் வளர்க்கிறது....
இதுவே ஆணாக இருந்திருந்தால்
நீ பூமிபார்த்து நடக்கும்போது உன்னைப்பார்த்துக்
காதல் அல்லவா வளர்த்திருக்கும்......


*********************************************
*********************************************



நேற்றும் உனதானது இரவு...
புரியலையா???
என் கனவில் நீ வந்தாய் என்பதைச் சொன்னேன்....
என் உடை அழகாக இருக்கிறதா என்று கேட்கிறாய்....
இல்லை என்கிறேன்
உடனே கோபம் கொள்கிறாய்....
ஏ... அழகுப்பிசாசே!
நான் இன்னும் முடிக்கவில்லை
நீ அதைவிட
அழகாயிருக்கிறாய் என்றவுடன் உதடுகடிக்கிறாய்....
கண்விழித்தேன்
கட்டிலுக்கு எதிரே
புன்னகைக்கிறாய்
புகைப்படமாய்........


**********************************************
**********************************************



காதல்!
கற்பனை வாழ்வில் புன்னகைத்துவிட்டு,
நிஜவாழ்க்கையில் ஓலமிட்டு அழுகிறது.....

***********************************************
***********************************************