Wednesday, September 14, 2011

முத்தம்


எனக்குள் நான் 
உன்னைப் பருகிக்கொள்ளவும்
உனக்குள் நீ 
என்னைப் பருகிக்கொள்ளவும்
கிடைத்திருக்கும்
மதுக்கோப்பை - முத்தம்!

******



அப்படித்தான்!
ம்...
அப்படியே
உறிஞ்சி
எனக்குள்ளிருக்கும் உன்னை
மேலெழுப்பு...
அவளுக்கும் ஒன்று தரவேண்டும்!!!

******



முத்தக் 
கணங்களில்
சிரிக்காதே...
மூச்சு திணறுகிறது காதல்!
மூர்க்கமாகிறது காமம்!

******


இதழ் ஒற்றி எடுப்பதாயிருந்தால்
நொடிக்கொன்று வேண்டும்...

நெடிய முத்தமென்றால்
நாம் பொம்மையாகும் வரை வேண்டுமெனக்கு!

******



ஆயிரமாவது முத்ததிற்குப் பிறகு
அவ்ளோதான் இன்னைக்கு - என 
சொன்னதில் விளைந்த 
மௌனத்தை உடைக்க
தற்செயலாய்

முத்தத்தின் சுவையென்ன
எனக்கேட்டாய் நீ...
சோதித்துப் பார்ப்போமா
எனக்கேட்டேன் நான்...
சிரிக்கத்துவங்கிவிட்டது காதல்!

******



நாணத்தோகை
களைந்துவிடு
கரும்பு சாப்பிடவேண்டுமெனக்கு!

******


காமம் தடவிய 
முத்தப் பண்டங்கள்
நமக்கு குழந்தைகள் செய்யும்...
காதல் மட்டும் ஊற்றிய 
முத்த பாணங்கள்
நம்மையே குழந்தைகளாக்கும்...

வா குழந்தைகளாவோம்!
******


Saturday, April 16, 2011

அடிக்கத்தூண்டிய அரவங்கள்-1



ஒழுகிய கூரையின்
ஓதம் காயா வீட்டில்
கோணிப்படுக்கைகளுக்கிடையே 
மலர்ந்திருந்தது ஒரு நாய்க்குடை!

அதனருகே...
இதழ் அவிழ்க்கத் துடிக்கும்
மொட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் போல
இமை திறக்க அசைவுருகிறாள்
பதின்வயதில் பாதி தொட்டிரா என் கதை நாயகி!

குண்டு விழுந்து
உடற்சிதறிச் செத்துப்போன அப்பாவும்,
முட்டைவிற்றுக் கிடைக்கும் காசில்
அரிசிச்சோறு சாப்பிடலாம் என 
என்றோ சொல்லியிருந்த அம்மாவும்,
முட்டையிடத் தயாரானக் கோழியும்
ப்ரக்ஞையில் அறைந்ததும்
விடுக்கென்று அவள் எழுகிறாள்...

தினம் தினம்
தின்று சலித்துப்போன 
உப்புக்களிச் சுவையை
மேற்பற்களால் சிரைத்தும்
பாவாடையால் துடைத்தும் 
நாக்கிலிருந்து விரட்ட அவள் முயற்சிக்கிறாள்...

ஒரு தவசியின் ஜெபம் போலவும்
ஒரு முனிவனின் சாபம் போலவும்
அவளின் சிந்தனையெல்லாம் அரிசிச்சோறாகவே இருக்கிறது...

பசித்து அழும்போது
அப்பனிடம் போகாமல்
அம்மையிடம் போகத்துடிக்கும் மழலையைப்போல
தாயைக்கூடத் தேடாமல்
அவள் கூடுநோக்கி விரைகிறாள்...

முன்தினம் பகைவர்கள் ஷெல் அடித்தபோது
பெரும் கூச்சலிட்டு ஓடியபோது 
கூட்டைத் திறந்துவிட்டது அவளுக்கு நினைவிலிருந்தது...

காடு மேடு
சுற்றித் திரிந்து
கழுகு கொத்தும் சில போர்ப் பிணங்கள் தாண்டி
அவள் அக்கொழியைக் காண்கிறாள்...

ஒரு பட்டுப்போன
புத்தரின் பின் மறைந்திருந்து
கோழியிடப்போகும் முட்டைக்காக
அவள் காத்திருக்கிறாள்...
கோழியின் பின்பகுதி
அவளுக்கு நெல்வயலாகக் காட்சிதருகிறது...

காசுவிழும் சத்தம் கேட்பதற்காக
மௌனித்துக் காத்திருக்கும்
குருட்டுப்பிச்சைக்காரனைப்போல 
அவள் காத்திருக்கிறாள்...

தவம் செய்யும் பக்தனுக்கு 
தாமதமாக காட்சிதரும் கடவுளைப்போல
தாமதமாகவே முட்டையிட்டது அக்கோழி...

தாயின் தனத்தை
ஆர்வமாகப் பிடித்து பாலுண்ணும் சேய் போல
அவள் அம்முட்டயைப் பிடித்திருக்கிறாள்...

எங்கோ விழுந்த குண்டுச்சத்தத்தில்
பிடி நழுவி
முட்டையின் மஞ்சள் ரத்தம்
நிலம் பரவியதும்
அவள் அழுதுகொண்டே வீடு நோக்கி ஓடுகிறாள்...

அங்கே அந்த இளம் தமிழச்சியின்
இன எதிரிகள் சிலபேர்
அவளின் அம்மாவை வைத்து
இனக்கலப்பு செய்துகொண்டிருந்தர்கள்...

பின்பு ஒருநாள் அவள் பெண்புலியானாள்!


Friday, March 11, 2011

ஒரு வியாபாரியும் அவரின் பெருமூச்சும்


நரைத்திருந்த தாடியிலும்
நலங்கெட்டக் கண்களிலும்
இளைத்தக் கன்னங்களிலும்
லேசாய் பருத்து
லேசாய் வளைந்திருந்த முதுகிலும்
வண்டியிழுக்கையில் வெளிப்படும்
வைக்கோல் நரம்புகளிலும்
ஒட்டியிருந்தது அவரின் முதுமை...


கிளம்பிவிட்ட பேருந்தின்
ஒரு ஜன்னலுக்கு
திடிரென முளைத்திருந்த
கரத்தினைக் கண்டதும்,


தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல

கூம்புக் காகிதத்தில் 
சுவைபொருள் நிரப்பி
கால்களில் இளமை சுரந்து

அவசரமெடுத்து
ஜன்னல் அடைந்து
பண்டம் கொடுத்து
அவ்வேகத்தில் பேரமும் கடந்து
கிடைத்ததை அடைந்து
கல்லாவில் போட்டதும்
அவரிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு என்னிடம் சொன்னது...


அவருக்குச் சாதிக்காத
ஒரு மகனிருக்கிறான் என்று!


இல்லையில்லை


சாதித்த மகன்
கைவிட்டுவிட்டான் என்று!


இல்லையில்லை

அவருக்கு திருமண
வயதில் ஒரு மகளிருக்கிறாள் என்று!

இல்லையில்லை

அவரின் மகளின் குழந்தைக்கு
ஒரு பொம்மை பரிசளிக்க என்று!

இல்லையில்லை

அவரின் மனைவிக்கு 
அடுத்தநாள் பண்டிகைக்கு
ஒரு புடவை வாங்கித்தர என்று!


இல்லையில்லை


இறந்துவிட்ட மனைவியின் படத்திற்கு 
ஒரு சந்தன மாலை அணிவிப்பதற்கு என்று!

இல்லையில்லை

அவர் யாருக்கும் 
அடிமையாக இருக்கவில்லை என்று!


இல்லையில்லை


அவர் யாரன்பிற்கோ
அடிமையாக இருக்கிறார் என்று!


இல்லையில்லை

அவருக்கு அன்றிரவின்
சாராயத்திற்குப் பணமில்லை என்று!


இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!