Saturday, April 16, 2011

அடிக்கத்தூண்டிய அரவங்கள்-1



ஒழுகிய கூரையின்
ஓதம் காயா வீட்டில்
கோணிப்படுக்கைகளுக்கிடையே 
மலர்ந்திருந்தது ஒரு நாய்க்குடை!

அதனருகே...
இதழ் அவிழ்க்கத் துடிக்கும்
மொட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் போல
இமை திறக்க அசைவுருகிறாள்
பதின்வயதில் பாதி தொட்டிரா என் கதை நாயகி!

குண்டு விழுந்து
உடற்சிதறிச் செத்துப்போன அப்பாவும்,
முட்டைவிற்றுக் கிடைக்கும் காசில்
அரிசிச்சோறு சாப்பிடலாம் என 
என்றோ சொல்லியிருந்த அம்மாவும்,
முட்டையிடத் தயாரானக் கோழியும்
ப்ரக்ஞையில் அறைந்ததும்
விடுக்கென்று அவள் எழுகிறாள்...

தினம் தினம்
தின்று சலித்துப்போன 
உப்புக்களிச் சுவையை
மேற்பற்களால் சிரைத்தும்
பாவாடையால் துடைத்தும் 
நாக்கிலிருந்து விரட்ட அவள் முயற்சிக்கிறாள்...

ஒரு தவசியின் ஜெபம் போலவும்
ஒரு முனிவனின் சாபம் போலவும்
அவளின் சிந்தனையெல்லாம் அரிசிச்சோறாகவே இருக்கிறது...

பசித்து அழும்போது
அப்பனிடம் போகாமல்
அம்மையிடம் போகத்துடிக்கும் மழலையைப்போல
தாயைக்கூடத் தேடாமல்
அவள் கூடுநோக்கி விரைகிறாள்...

முன்தினம் பகைவர்கள் ஷெல் அடித்தபோது
பெரும் கூச்சலிட்டு ஓடியபோது 
கூட்டைத் திறந்துவிட்டது அவளுக்கு நினைவிலிருந்தது...

காடு மேடு
சுற்றித் திரிந்து
கழுகு கொத்தும் சில போர்ப் பிணங்கள் தாண்டி
அவள் அக்கொழியைக் காண்கிறாள்...

ஒரு பட்டுப்போன
புத்தரின் பின் மறைந்திருந்து
கோழியிடப்போகும் முட்டைக்காக
அவள் காத்திருக்கிறாள்...
கோழியின் பின்பகுதி
அவளுக்கு நெல்வயலாகக் காட்சிதருகிறது...

காசுவிழும் சத்தம் கேட்பதற்காக
மௌனித்துக் காத்திருக்கும்
குருட்டுப்பிச்சைக்காரனைப்போல 
அவள் காத்திருக்கிறாள்...

தவம் செய்யும் பக்தனுக்கு 
தாமதமாக காட்சிதரும் கடவுளைப்போல
தாமதமாகவே முட்டையிட்டது அக்கோழி...

தாயின் தனத்தை
ஆர்வமாகப் பிடித்து பாலுண்ணும் சேய் போல
அவள் அம்முட்டயைப் பிடித்திருக்கிறாள்...

எங்கோ விழுந்த குண்டுச்சத்தத்தில்
பிடி நழுவி
முட்டையின் மஞ்சள் ரத்தம்
நிலம் பரவியதும்
அவள் அழுதுகொண்டே வீடு நோக்கி ஓடுகிறாள்...

அங்கே அந்த இளம் தமிழச்சியின்
இன எதிரிகள் சிலபேர்
அவளின் அம்மாவை வைத்து
இனக்கலப்பு செய்துகொண்டிருந்தர்கள்...

பின்பு ஒருநாள் அவள் பெண்புலியானாள்!


13 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு பாஸ்

gayathri said...

ரொம்ப நல்லா இருக்கு jai,sir உங்கள கதைநாயகி introduction,super. காசுவிழும் சத்தம் கேட்பதற்காகமௌனித்துக் காத்திருக்கும்குருட்டுப்பிச்சைக்காரனைப்போல அவள் காத்திருக்கிறாள்...
தவம் செய்யும் பக்தனுக்கு தாமதமாக காட்சிதரும் கடவுளைப்போலதாமதமாகவே முட்டையிட்டது அக்கோழி...

நல்ல உவமைகள்,totaly superbbb...

இளங்கோ said...

//ஒரு தவசியின் ஜெபம் போலவும்
ஒரு முனிவனின் சாபம் போலவும்
அவளின் சிந்தனையெல்லாம் அரிசிச்சோறாகவே இருக்கிறது...//
உணர்வுக் கவிதை..

Unknown said...

Superb thambi

Thenu said...

அட்டகாசம் ஜெயா.. வாழ்த்த இயலும் வார்த்தைகளைத் தேட மனம் மறுத்துவிட்டு, உங்கள் கதை நாயகியுடன் விழிபிடித்து நடக்கத் துவங்குகிறது..
ஒவ்வொரு வரியும் அதற்கான வன்மத்தை மிக ஆழமாக பதிவு செய்கிறது, வரிகளைப் பிரித்துப் பார்க்க எண்ணம் இல்லை...
கவிதையின் இறுதி அறுதியாக மனதில் பதியும்... "அங்கே அந்த இளம் தமிழச்சியின் இன எதிரிகள் சிலபேர் அவளின் அம்மாவை வைத்து இனக்கலப்பு செய்துகொண்டிருந்தர்கள்... பின்பு ஒருநாள் அவள் பெண்புலியானாள்"
எப்படிப் பட்ட வரிகள் ஜெயா... உணர்ச்சிவசபடுத்திட்டீங்க, என்னால முடியல.. வாழ்த்துக்கள், எதிர்பார்ப்புடன் உங்கள் ரசிகன்.. :)

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

கவிதையில் கண் முன்னே நிகழ்ந்த அக்கிரமத்தை கண்டும் ஏதும் செய்ய முடியாத பிஞ்சின் உணர்வுகளையும், பின் நாளில் அப் பிஞ்சின் மனதில் ஏற்பட்ட மாற்றங்களையும் உணர்வுகளுக்கு உருவகம் கொடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

சரியில்ல....... said...

தினம் தினம்
தின்று சலித்துப்போன
உப்புக்களிச் சுவையை
மேற்பற்களால் சிரைத்தும்
பாவாடையால் துடைத்தும்
நாக்கிலிருந்து விரட்ட அவள் முயற்சிக்கிறாள்...//

அருமையான கவியாற்றல்..
கலக்குங்க பாஸ்....

mohana priya said...

ரொம்ப நல்லா இருக்கு

kavidhaigal ezhutha varthai therivu ungalidamthan katrukkolla vendum sir. sathiyama solla varthai illai.

VERY HEART SALUTE FOR YOUR POET.

mohana priya said...

SUPERB SUPRBBBBBBB.

SINTHIYA said...

chanceless da.alaga irunchu antha ponnoda feeling....

kovai sathish said...

ஈழ தமிழர்களின் கண்ணீர் துடைக்க
இந்த கவிதைக்குடை
சிலபொழுதில்
வாளாக மாறலாம்...
அருமை ஜெயா...

SATHISH SUNDAR DHILIP KUMAR said...

ஜெயா, முழுவதுமாக படித்தேன், நீ எழுதிய அடிக்கதூண்டிய அரவங்கள் வார்த்தைகளில் உள்ள அர்த்தங்கள் அனைத்து இதயத்துக்கும் சேர்க்கபட வேண்டிய ஒரு உண்மை ஆதாரங்கள்.